ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.;

Update: 2025-07-23 13:37 GMT
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மேலும், மனதை செலுத்தாமல் இயந்திர தனமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்த தகவலை தெரிவித்தல், ஆவணங்களை குற்றவாளிகளுக்கு தருவது, உத்தவுக்கான அனுமதி ஆகியவற்றில் காலதாமதம் மற்றும் குளறுபடிகள் குறித்து காவல் துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், காவல் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Similar News