கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
கடம்பூர் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு;
ஈரோடு மாவட்டம், கடம்பூர் அடுத்த திருடி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (36). அவரது மனைவி சுகன்யா. சிவகுமார் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களாகவே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிவகுமார் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சுகன்யா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சிவகுமார் மட்டும் இருந்துள்ளார். வேலை முடிந்து சுகன்யா வீட்டுக்கு வந்தார். அப்போது கணவர் வீட்டில் இல்லாததால் அவரை தேடி உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கேயும் கணவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் கிட்டாம் பாளையம் ரோட்டில் ஒரு புளிய மரத்தில் சிவகுமார் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சிவக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.