சந்தனக் கட்டைகளை கடத்திய மர்ம நபர்கள்

நத்தம் அருகே நயினா கவுண்டன்பட்டி பகுதியில் போலீஸ் ரோந்தின் போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் பைக் மற்றும் சந்தனக் கட்டைகளை போட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். சந்தனக் கட்டை, பைக் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2025-08-03 10:52 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் போலீசார் நேற்றிரவு செந்துறை பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது நயினா கவுண்டன்பட்டி பகுதியில் பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் சாக்குப் பையுடன் வருவதைக் கண்டுள்ளனர். போலீசாரைப் பார்த்ததும் சாக்குப் பையையும், பைக்கை போட்டு விட்டு மர்ம நபர்கள் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. உடன் போலீசார் அந்தக் கட்டைகளை பார்த்த போது அது சந்தனக்கட்டை என்பது தெரியவந்தது. உடன் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற பைக் மற்றும் சுமார் 20 கிலோ கிராம் எடை கொண்ட 8 சந்தன மரதுண்டு கட்டைகளை நத்தம் காவல்நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அய்யலூர் வனச்சரகத்திற்கு உட்பட்டது என தெரியவந்ததையடுத்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனவர் தினேஷ்குமார் வசம் பைக் மற்றும் சந்தனக்கட்டைகளை ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் இந்த சந்தன மரக்கட்டைகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வெட்டப்பட்டதா? தனியார் இடத்தில் வளர்க்கப்பட்டதில் வெட்டப்பட்டதா? உரிய அனுமதி பெறாமல் வெட்டி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? இந்த செயல் தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறுகிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News