தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறை பராமரிப்புப் பணிகளுக்காக, தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில், ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிரலாளர் முனைவர் அகிலனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினரிடம் பேராவூரணி பெண்கள் பள்ளியில் கழிப்பறைகளை மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சேரன்-லட்சுமி பிரியா இணையர் தங்களது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினர். தன்னார்வலர்கள் சேரன், லட்சுமி பிரியா இணையர் வழங்கிய ரூபாய் 10,000, பள்ளி கழிப்பறை மேம்பாட்டுக்காக, தலைமையாசிரியர் முனைவர் மேனகாவிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி, கொடையாளர்கள் லட்சுமிபிரியா, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.