பைக் சாகசம் இளைஞரின் வாகனம் பறிமுதல்.

பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வாகனம் பறிமுதல்.;

Update: 2025-08-25 13:08 GMT
பரமத்தி வேலூர்,ஆக.25:  பரமத்தி வேலூர் காமராஜர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வெளியூர் சென்று வருகின்றனர். இந்த  நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அளவில் பஸ்சுக்காக காத்திருந்தனர். இந்தநிலையில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் பஸ் நிலையத்திற்குள்  வந்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் மட்டும் திடீரென தனது மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டார். இது பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்தபோது பெண் பயணி ஒருவர் தனது குழந்தையின் கையை பிடித்துக்கொண்டு வேகமாக ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.   மேலும் மோட்டார்சைக்கிளில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுவதும், வீலிங் சாகசத்தில் ஈடுபடுவதும் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பஸ் நிலையம் அருகிலேயே போலீஸ் நிலையம் அமைந்திருந்தும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட அந்த வாலிபரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து  மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News