உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டார்.;
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, நரிக்குடி மற்றும் காரியாபட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று(03.09.2025) சிவகாசி மாநகராட்சி மலையம்மன் திருமண மண்டபம், இராஜபாளையம் நகராட்சி மரக்கண்ணு செட்டியார் நினைவு திருமண மண்டம், திருச்சுழி வட்டம், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காரியாபட்டி வட்டம் டி.வேப்பங்குளம், அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் சமுதாயக்கூடம், நரிக்குடி வட்டம் வேலாயூரணி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. அதன்படி, திருச்சுழி வட்டம், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நரிக்குடி வட்டம் வேலாயூரணி மற்றும் காரியாபட்டி வட்டம் டி.வேப்பங்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், காரியாபட்டி அமலா உயர்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெறவுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.