திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் : மொய் எழுதி தரிசனம்!
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் மொய் எழுதி தரிசனம்!;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த அக். 22 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக். 27) மாலை நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று (அக். 28) சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு தெய்வானை தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு ஏராளமான பெண் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கல்யாண மண்டபம் வந்து தெய்வானைக்கு காட்சியளித்தார். அப்போது வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடித்து சுவாமியை பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து தெற்கு ரத வீதி-மேல ரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி இரவு 7.45 மணியளவில் நடைபெற்றது. பின்னர், சுவாமியும் அம்மனும் கோயில் வந்து சேர்ந்தனர். நள்ளிரவு கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மொய் எழுதி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு, கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கனகராஜன், இன்னோஸ்குமார் உள்பட போலீஸார் ஈடுபட்டனர்.