காணாமல் போன இளம் பெண் மீட்பு
குமாரபாளையத்தில் காணாமல் போன இளம் பெண் மீட்கப்பட்டார்.;
குமாரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராமன், 38. தனியார் நிறுவன தொழிலாளி. இவரது மூத்த சகோதரி வசந்தி, 45, தன் மகள் பிரியங்கா, 19, என்பவரை, ராமன் வீட்டில் விட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார். பிரியங்கா சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், ராமனின் அம்மா குப்பாயி, 65, சிறிய அக்கா செல்வி, 40, ஆகியோர், அபெக்ஸ் காலனியில் உள்ள பாடம் போடும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பூஜை முடிந்து திரும்பி பார்த்த போது, பிரியங்காவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவவில்லை. இதுகுறித்து ராமன், குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார், காணாமல் போன பிரியங்காவை தேடி வந்தனர். அனைத்து சமூக வலைதளங்களில் இந்த பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்து, பார்த்தால் தகவல் சொல்லுங்கள் என தகவல் போட்டு இருந்தனர். சமூக ஆர்வலர்கள் பலரும் இதனை பல குரூப்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10:00 ,மணியளவில் சங்ககிரியிலிருந்து கொங்கனாபுரம் செல்லும் வழியில், ஒருக்கா மலை என்ற பெருமாள் மலை பகுதியில், குமாரபாளையத்தை சேர்ந்த சபரி போட்டோ ஸ்டுடியோ சேகர் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த பெண்ணை பார்த்ததும், வலைதளங்களில் பார்த்த பெண் போல உள்ளது என சந்தேகம் கொண்டு, அந்த பெண்ணை போட்டோ எடுத்து, போலீசார் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப, அவர்கள் அந்த பெண்தான் என சொல்ல, அந்த பெண்ணை அவர் குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். உறவினர்களை வரவழைத்து எந்த பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். காணாமல் போன பெண் கிடைத்த மகிழ்ச்சியுடன், போலீசாருக்கு நன்றி கூறினார்கள். --