தளவாய்புரத்தில் ஒப்பந்தப்படி மூன்றாவது ஆண்டு ஊதிய உயர்வு கோரி பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் 13 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்
தளவாய்புரத்தில் ஒப்பந்தப்படி மூன்றாவது ஆண்டு ஊதிய உயர்வு கோரி பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் 13 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ஒப்பந்தப்படி மூன்றாவது ஆண்டு ஊதிய உயர்வு கோரி பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் 13 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கூலி உயர்வு தொடர்பான நான்கு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று கிராம நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நாளை கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் சுமார் 600 விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் காலாவதியாகி விட்ட நிலையில், இந்த ஆண்டு 5 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான கூலி உயர்வு கோரியும், கூலி உயர்வு வழங்காத விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்காத தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும், ஏஐடியுசி மற்றும் சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் இன்று 13 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கூலி உயர்வு தொடர்பாக ஶ்ரீ பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட நான்கு கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் இன்று விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வலியுறுத்தியும் கூலி உயர்வு வழங்காத உரிமையாளர்களை கண்டித்தும், ஒப்பந்தப் படி கூலி உயர்வு வழங்கவும், அரசு தலையிட்டு சுமூகமான முடிவு எடுக்கவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விசைத்தறி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 13 நாட்களாக தொழிலாளர்கள் பட்டினியாக இருக்கும் நிலையில் ஒப்பந்தப்படி 5 விழுக்காடு கூலி உயர்வு வழங்காமல் மூன்று விழுக்காடு மட்டுமே உயர்த்தி வழங்கப்படும் என கூறும் உரிமையாளர்களை கண்டித்து நாளை கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.