நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.6.64 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 538 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரணவன் , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.6.00 இலட்சம் மதிப்பில் தொழில்முறை டாக்சி வாகனம் மற்றும் ஆட்டோ மானியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.63,801/- மதிப்பில் காதொலி கருவி மற்றும் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் என 17 பயனாளிகளுக்கு ரூ.6.64 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)சு.சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.