ஒரத்தநாட்டில் ரூ.1.91 கோடியில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம்: காணொலிக்காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
திறப்பு விழா;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தினை வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, சதயவிழாக்குழுத் தலைவர் து.செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். . 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மானியக் கோரிக்கையில், அதிக அளவில் வருவாய் ஈட்டித் தரும் பதிவுத்துறையில், மிகவும் பழுதடைந்த கட்டடங்களில், வாடகை கட்டடங்களில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகங்கள் பொதுமக்களின் நலன் கருதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய சொந்த அரசு கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஒரத்தநாட்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.1கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 503 மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டப் பதிவாளர்கள் சுரேஷ்பாபு (நிர்வாகம்), வெங்கடேசன் (தணிக்கை), ஒரத்தநாடு சார்பதிவாளர் (பொ) சிவா, பட்டுக்கோட்டை சார்பதிவாளர் (நிர்வாகம்) செல்வம், பட்டுக்கோட்டை சார்பதிவாளர் (வழிகாட்டி) யாகியா கான் மற்றும் சபலர் கலந்து கொண்டனர்.