மோகனூர் அருகே கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது.
மோகனூர் அருகே கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
பரமத்திவேலூர், ஜூலை.22: நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, மதுவிலக்கு ஏ.டி. எஸ்.பி. தனராசு ஆகியோர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் கொண்ட குழுவினர் மோகனூரில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் தீர்தாம்பாளையம் அருகே மதுவிலக்கு சம்மந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஸ்கூட்டரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த கைப்பையில். ரூ.63 ஆயிரத்து 600 மதிப்பிலான 6 கிலோ கஞ்சா போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது எருமப்பட்டியை சேர்ந்த திருப்பதி (23), விக்னேஷ்வரன் (20), சேந்தமங்கலத்தை சேர்ந்த சஞ்சய் (19) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் ரூ.63 ஆயிரத்து 600 மதிப்புள்ள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் 6 கிலோ எடை கொண்ட கஞ்சாவையும், ஸகூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.