காவிரி வெள்ள பாதிப்பால் சேதமான 7 வீடுகள்

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பு மையத்திலிருந்து மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியதில், ஏழு வீடுகளில் வெள்ள நீர் புகுந்து சேதம் அடைந்ததால் ஏழு குடும்பத்தினர் மட்டும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-08-08 12:24 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் காவிரி கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால், குமாரபாளையம் காவேரி கரையோர பகுதிகளான பொன்னியம்மாள் சந்து, கலைமகள் வீதி, இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர், மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 143 குடும்பங்களைச் சேர்ந்த 572 நபர்கள் நான்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருவாய் துறை, நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரால் பராமரிக்கப்பட்டு வந்தனர். தற்பொழுது வெள்ளம் படிப்படியாக காவிரியில் குறைந்ததையடுத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறியவர்கள், முகாம்களை விட்டு மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல, தங்கள் வீடுகளை சுத்தம் செய்து தாங்கள் வசிப்பதற்காக தயார் நிலையில் இருந்த பொழுது, அதிகாரிகள் வீடுகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது கலைமகள் வீதி, பொன்னியம்மாள் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்பால் 7 வீடுகள் சேதமடைந்திருந்தது. எனவே அந்த ஏழு குடும்பத்தினரை தவிர மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கினர். பின்னர் கட்டிட ஆய்வாளர் கொண்டு அந்த ஏழு வீடுகளில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் பெற்ற பின்னரே அந்த ஏழு வீடுகளுக்கும் முகாம்களில் உள்ளவர்கள் செல்ல வேண்டுமென வட்டாட்சியரும், நகராட்சி ஆணையாளரும் தெரிவித்துள்ளனர். எனவே தற்பொழுது இந்த ஏழு வீடுகளை சேர்ந்தவர்கள் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அந்த குறிப்பிட்ட ஏழு வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதியில் தொடர்ந்து காவிரியில் வெள்ளம் வரும் பொழுது, தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், தங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News