
தஞ்சாவூர் அருகே அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பி.குறுந்தையன் (50). காவல் துறையின் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்த இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருந்தன. இந்நிலையில், இவர் அப்பகுதியில் மார்ச் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், 2013 ஆம் ஆண்டில் தேர்தல் பிரச்னை காரணமாக ஏழுப்பட்டியைச் சேர்ந்த உலகநாதனையும், 2014 ஆம் ஆண்டில் பர்மா காலனியைச் சேர்ந்த உதயாவையும் குறுந்தையன் கொலை செய்தார். இதற்கு பழி வாங்கும் விதமாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏழுப்பட்டியைச் சேர்ந்த ரவி மகன் ஒத்தகை ராஜா என்கிற ராஜா (33), உலகநாதனின் அண்ணன் எம்.முத்துமாறன் (46), மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பழனிசாமி மகன் கோபால் என்கிற தினேஷ்குமார் (25), தூத்துக்குடியைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்தி (25), பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் மணிகண்டன் (33), கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டையைச் சேர்ந்த கர்ணன் மகன் வீரமணி (26), கிள்ளுக்கோட்டை தனிஸ்லாஸ் மகன் அந்தோணி வில்சன் (25) ஆகிய 7 பேரையும் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.