என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி!
பிளஸ் டூ மாணவர்களுக்கான என் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான என் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வேலூர் லட்சுமி கார்டன் பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார். வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "இதுதான் நீங்கள் தெளிவான முடிவு எடுக்கக்கூடிய தருணமாகும். உறவினர்கள், நண்பர்கள் கூறுவதை கேட்டு தவறான முடிவை எடுக்க வேண்டாம். உங்களுக்கு புரியும் பாடப்பிரிவை தேர்வு செய்யுங்கள். முதலில் குடும்பத்தை, பெற்றோரை பார்க்க வேண்டும். பெற்றோருக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும்.
நல்ல வேலைக்கு சென்று அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. பொருளாதாரத்தில் வலிமை பெறுவது அவசியம். தயக்கம், பயம் முன்னேற்றத்துக்கு உதவாது.இவை இரண்டையும் விட்டுத்தள்ளுங்கள். கடின உழைப்பு முக்கியம். செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது. பெற்றோருக்கு உண்மையாக இருக்க வேண்டும்" என்றார்.