18 பேர் மீது வழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : விதிமுறைகளை மீறியதாக 18 வழக்கு பதிவு;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியானது. உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் நடத்தை விதிகளை மீறுகின்றனரா என பறக்கும் படையினர் கண்காணித்து அளிக்கும் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வகையில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொடி கம்பங்கள், முன் அனுமதியின்றி கூட்டம் நடத்துபவர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரசாரம் செய்தவர்கள், வாக்கு கேட்டு விளம்பர பதாகைகளை வைத்து விதி மீறியதாக நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க உள்ளியிட்ட அரசியல் கட்சியினர் மீது இதுவரை 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.