சேலத்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் - பரபரப்பு
Update: 2023-12-22 11:46 GMT
தீப்பற்றி எரிந்த கார்
சேலம் திருவாகவுண்டனூர் வேடிக்கவுண்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் (43), கட்டிட காண்டிராக்டர். இவர் இன்று காலை வீட்டில் இருந்து மேட்டூருக்கு தனக்கு சொந்தமான கியாஸ்சில் இயங்கும் ஆம்னி காரில் புறப்பட்டார். இந்த கார் வீட்டின் அருகே உள்ள திருவாகவுண்டனூர் பைபாசில் சென்ற போது காரில் இருந்து புகை வருவதாக சாலையோரம் நடந்து சென்றவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரை நிறுத்தி விட்டு இறங்கினார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பற்றி எரிந்தது. காரின் உரிமையாளர் மண்ணை அள்ளி போட்டு தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கு கியாஸ் கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.