வாலிபரை வழிமறித்து தாக்கிய 4பேர் மீது வழக்கு
வாலிபரை மது போதையில் வழிமறித்து தாக்கிய 4பேர் மீது வழக்கு. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Update: 2024-02-22 05:12 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் அருகே தென்குமரைபகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவா(32). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(50). இருவரும் கடந்த 18ம் தேதி, சிவாவின் டுவீலரில் சாத்தப்பாடிக்கு சென்று, மீண்டும் புனல்வாசல் ஏரிக்கரை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, சிவா மனைவி செல்போனில் அழைத்ததால், அப்பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், குடிபோதையில் ராமச்சந்திரனிடம் செல்போன் கேட்டுள்ளனர். அவர் தரமறுத்ததால், மீண்டும் செல்போன் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிபோதையில் இருந்த வாலிபர்கள், தங்கள் ஊரில் இருந்து மேலும் 2 வாலிபர்களை வரவழைத்து, சிவாவை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். இதையடுத்து காயத்துடன், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிவா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீசார், மோகன், சூர்யா, விஜயகுமார், அஜித் உள்ளிட்ட பலர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.