கள்ளுக் கடைக்கான தடையை நீக்க வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

பனைமரங்களிலிருந்து கள் இறக்க, விற்பனை செய்ய தடையை நீக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Update: 2024-06-28 02:54 GMT

கள்ளுக் கடைக்கான தடையை நீக்க வழக்கு 

புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நடராஜன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். அதிலிருந்து கள் இறக்க தமிழக அரசு 1987 ல் தடை விதித்தது தொடர்கிறது. இதனால் பாரம்பரிய பனை தொழில் செய்வோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பனையை பாதுகாத்தல், வளர்ப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டது.ஆந்திரா, கேரளாவில் கள் இறக்கி விற்க அம்மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. அதில் கலப்படம் செய்தால் தண்டனைக்குரிய குற்றம் என அறிவுறுத்தி உரிமம் வழங்கி, கள்ளுக் கடைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கேரளாபோல் கள்ளுக்கடை நடத்த தமிழகத்தில் புதிய சட்டம் இயற்றி, அனுமதிக்க வேண்டும். கலப்படம் செய்வோரை தண்டிப்பதன் மூலம் பனை மரங்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களை பாதுகாக்க முடியும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். பனைமரங்களிலிருந்து கள் இறக்க, விற்பனை செய்ய அனுமதிக்க தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கள்ளுக்கு தடை விதித்துவிட்டு பீர் உள்ளிட்ட மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதித்தது பாரபட்சமானது. மது உற்பத்தி, விற்பனைக்கு அனுமதித்தது சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தது.

Tags:    

Similar News