அழுகிய நிலையில் கற்களால் மூடிகிடந்த சடலம்

எண்ணுாரில் கற்களால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-08 02:18 GMT

அழுகிய நிலையில் ஆண் சடலம்

 எண்ணுார், இ.டி.பி.எஸ்., குடியிருப்பு பின்புறம், ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு, பாட்டில் சேகரித்து பிழைப்பு நடத்தி வரும் முனியாண்டி, 68, என்பவர், நேற்று காலை சென்றுள்ளார். அப்போது, அழுகிய நிலையில் கற்கள் மற்றும் துணியால் மறைக்கப்பட்டிருந்த நிலையில், ஆண் சடலம் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த முனியாண்டி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எண்ணுார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின், கத்திவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மேனகா முன்னிலையில், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். விசாரணையில், 15 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

இறந்தவர் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. உடல் கற்கள் மற்றும் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால், கொலை செய்யப்பட்டு, உடலை மறைத்து வைத்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என போலீசார் கூறினர்.

Tags:    

Similar News