மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை

100% தேர்ச்சிக்காக குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் ஆட்சியரிடம் மனு அளித்தார்.;

Update: 2024-06-19 05:28 GMT

மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்

கோவை: தமிழகத்தில் சில பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ்கள் கொடுத்து வெளியேற்றும் நிகழ்வுகள் ஓரிரு இடங்களில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற வேண்டுமென்று வலுக்கட்டாயமாக குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை பள்ளியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.அரசு பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இது போன்று வெளியேற்றப்படுகிறார்கள் எனவும் இதனை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் "பள்ளிகளில் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ்கள் கொடுத்து வெளியேற்றப்பட்டால் உடனடியாக மீண்டும் அதே பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்" என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை இயக்குனர் என அனைவரிடமும் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தின் சார்பாக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறினார்.

100% தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சரியாக படிக்காத மாணவர்களை வெளியேற்றிவிட்டு 100% காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பிய அவர் தமிழ்நாடு அரசு இடைநிற்றலை குறைக்க வேண்டும் என்பதற்காக குழு அமைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் கொடுத்து மாணவர்களை வெளியேற்றும் பள்ளியின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளாரா என கேள்வி எழுப்பியவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,முதலமைச்சர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறீர்களா? இத்தனை கொடுமைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பொழுது என் கேள்வி எழுப்பவில்லை என்றார்.

பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு அறிக்கையை அரசு அறிவித்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் பேசிய பல்வேறு உரையாடல்களை தான் வைத்துள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேட்கும் பட்சத்தில் அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News