மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல் 

தஞ்சை மாவட்டத்தில் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தபட்டுள்ளது..;

Update: 2024-05-16 11:53 GMT

உழவு பணி

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில்    தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி கோடை உழவு செய்திடுமாறு, சேதுபாவாசத்திரம் வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி.சாந்தி,  கேட்டுக் கொண்டுள்ளார்.  இ

துகுறித்து, அவா் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  "நன்கு ஆழமாக உழவு செய்யும் போது, கீழ் பகுதியில் உள்ள மண் மேலாகவும், மேலே உள்ள மண் கீழாகவும் மாறும் போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால் சத்துப்பற்றாக்குறை பிரச்சினை குறைகிறது. மண்ணின் இறுக்கம் குறைந்து மழைநீர் எளிதில் ஊடுருவி நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வேர்கள்  எளிதில் வளர்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிருக்கு கிடைப்பதால் நன்கு வளர்ச்சி அடைகின்றது.

Advertisement

கோடை உழவு செய்வதனால் மண்ணின் அடியில் உள்ள வேர்களை தாக்கும் மற்றும் நோய்களை உண்டாக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி, வெப்பம் காரணமாக கொல்லப்படுகின்றன. மண்ணிலிருந்து வெளிவரும் சிறு பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தித் தின்று அவைகளை அழித்து விடுவதால், அடுத்து சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது.

மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. கோடை உழவு செய்யும் களைச்செடிகள் மடக்கி உழப்பட்டு மீண்டும் களைகள் வராமல் தடுக்கப்படுவதால், களை மேலாண்மைக்கான செலவு மற்றும் நேரம் சேமிக்கப்படுகின்றது. களைச் செடிகள் இயற்கை எருவாக்கப்பட்டு மண் வளம் அதிகரிக்கிறது.

எனவே கோடை மழையை பயன்படுத்தி உழவுப் பணியை மேற்கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News