கொலை வழக்கில் ஆஜராகாத எஸ்ஐக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் தீர்ப்பு
டிசம்பர் 21ஆம் தேதி ஆஜராக உத்தரவு
Update: 2023-12-14 01:19 GMT
சிவகங்கை மாவட்டம், கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் இவருக்கும் இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த பாண்டிக்கும் மாடுகள் கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 ஏப். 16 அன்று ஏற்பட்ட பிரச்சனையில் பாண்டியன் கதிரேசனை கொலை செய்துள்ளார். இதுகுறித்து கதிரேசன் மனைவி கீதா மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது சிப்காட் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக முத்துக்கிருஷ்ணன் இருந்துள்ளார். இவர் தற்போது கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ., யாக பணிபுரிகிறார். இவர் அப்போது இந்த வழக்கை விசாரித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையானது தற்போது சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த நான்கு மாதமாக விசாரணைக்கு எஸ். ஐ., முத்துகிருஷ்ணன் ஆஜராகவில்லை. இதை அடுத்து இன்று எஸ்.ஐ., முத்துகிருஷ்ணனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து டிச.21 நீதி மன்றத்தில் ஆஜராக சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.