கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் - ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற வரும் பிப்ரவரி -29ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-09 03:34 GMT

மாவட்ட ஆட்சியர் கற்பகம் 

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதிய மாணாக்கர்கள் www.ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆதார் எண் அளித்து, லாகின் செய்ய வேண்டும். புதிதாக கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அனுகலாம். என மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News