சொத்து பிரச்சனையில் தம்பி மகளுக்கு பளார் - வீடியோ வைரல்

அருப்புக்கோட்டையில் சொத்து பிரச்சனையில் தம்பி மகளை அவரது பெரியப்பா கன்னத்தில் பளார் என அறையும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-25 07:23 GMT

வீடியோ காட்சி

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் அழகுமலை(65). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரர் சிங்கம்(55). இவரும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். சகோதரர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிங்கம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் புறவழிச்சாலை பகுதியில் தனது பெயரில் இருந்த 42 3/4 செண்ட் இடத்தில் 32 3/4 செண்ட் இடத்தை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சிங்கம் தான் விற்பனை செய்த இடத்தில், விற்பனை செய்த நபருக்கு 32 3/4 சென்ட் நிலத்தை அளந்து கொடுப்பதற்காக, நில அளவையரை வரவழைத்து இடத்தை அளக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.‌ அப்போது அங்கு வந்த சிங்கத்தின் சகோதரர் அழகுமலை இடத்தை அளக்கவிடாமல் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் செய்த அழகுமலையிடம் சிங்கத்தின் மகளான மனோகரன் மனைவி பூமாலை(33) ஏன் இங்கு வந்து வாக்குவாதம் செய்கிறீர்கள் எங்கள் இடத்தை நாங்கள் விற்கிறோம் உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அழகுமலை தம்பி மகள் என்றும் பாராமல் பூமாலையை அசிங்கமாக திட்டியதுடன் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதில் பூமாலை நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த பூமாலை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இது குறித்து தன்னை தாக்கிய தன் பெரியப்பா அழகுமலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News