சீத்தாமூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

சீத்தாமூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது.

Update: 2024-05-07 10:01 GMT
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கும் குப்பை, துாய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்படுகிறது.

காட்டுதேவாத்துார் பஜார் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில், முறையாக மாமிச கழிவுகளை அப்புறப்படுத்தாமல், கோழி இறகுகள், குடல், கால் போன்றவற்றை, செய்யூர் - சித்தாமூர் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். செய்யூர் - சித்தாமூர் சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலையோரம் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் துர்நாற்றம் வீசப்படுவதால், அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இறைச்சி கழிவு களை அகற்றி, சாலை ஓரத்தில் கழிவுகள் கொட்டும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News