கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கும் விழா

கலைஞர் மகளிர் திட்டம்

Update: 2023-11-10 09:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்க திட்டப்பணியை இன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் நடைபெற்ற விழா நிகழ்வில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை(ATM Card) வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன்  ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், கலைஞர் மகளிர் திட்ட பயனாளிகள் இடையே ஆட்சியர் தங்கவேல் பேசும் போது, மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் 7.35 லட்சம் பேருக்கு 2வது கட்டமாக உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இந்த பணம் வரவு வைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று (10ம் தேதி) முதல் உரிமை தொகையை வரவு வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த சுமார் 57 இலட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு . மேலும், இவர்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டதுடன், நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டும், நியாயமான காரணம் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணி தற்போது முடிவடைந்து அதன்படி, மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் சுமார் 7.35 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 7.35 லட்சம் பேருக்கும் இன்று முதல் வங்கி கணக்கில் ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு நேற்று முதலே அவர்கள் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 2ம் கட்ட மாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து முன்நூறு பேர் இந்த மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தின் கீழ் ரூ.1000 பயன் பெற உள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள்அனைவரையும் வாழ்த்துகிறேன். அனைவருடைய குடும்பங்களும் வளம் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா(கரூர்), ரவிசந்திரன்(குளித்தலை), மாமன்ற உறுப்பினர் சாந்திபாலாஜி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News