மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்க்க முன்பதிவு துவக்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கலயாணத்தை பார்க்க கட்டணச்சீட்டுகளுக்கான முன்பதிவு துவங்கியது.

Update: 2024-04-09 08:15 GMT

 மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கலயாணத்தை பார்க்க கட்டணச்சீட்டுகளுக்கான முன்பதிவு துவங்கியது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண்பதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது - ஆன்லைன் மூலமாக முன்பதிவும் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெறும் முன்பதிவு.

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் சித்திரை பெருவிழா வரும் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி வரை 13 நாட்கள் விழாவாக நடைபெறவுள்ளது. இந்த விழாவின் சிகர நிகழ்வாக மீனாட்சி சுந்தேரசுவரர் திருக்கல்யாண உற்சவம் வரும் 21 ஆம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது.

திருக்கல்யாண உற்சவம் கோவினுள் அமைந்துள்ள வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. இந்த திருக்கல்யாண உற்சவத்தினை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு இன்று தொடங்கியது ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்கள் https://hrce.tn.gov.in மற்றும் கோவில் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in- இன்று தொடங்கி 13 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

500 ரூபாய் கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் 2 கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதி எனவும், 200 ரூபாய் கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் 3 கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும், ஒரே நபர் ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பிக்கும் போது பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், நேரடியாக விண்ணப்பிக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவில் மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் முன்பதிவு நடைபெற்றுவருகிறது. கட்டணச் சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை, போட்டோ ஐடியுடன், கைபேசி எண், மின் அஞ்சல் முகவரியை வழங்கி முன்பதிவு செய்துவருகின்றனர் அனுமதிக்கப்பட்ட கட்டணச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் கணினி மூலம் குலுக்கல் முறையில் பக்தர்களை தேர்வு செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கும் வரும் 14ஆம் தேதி அனுப்பபடும்.

இதையடுத்து 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திருக்கல்யாண கட்டணச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். திருக்கல்யாண விழா நாளன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

500 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் வடக்கு இராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவார்கள் 200 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு இராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News