திருச்சி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

Update: 2024-04-24 05:23 GMT

திருச்சி அரசு மருத்துவமனை

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி பகுதியைச் சோ்ந்த 64 வயது ஆண் ஒருவா், விபத்தில் தலையில் அடிபட்ட நிலையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 19 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இறந்தவரின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரின் உறவினா்கள் முன்வந்ததையடுத்து, மருத்துவக் குழுவினா், அவரது உடலுறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெற்றனா்.

இவற்றை, தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில், உடலுறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசையின்படி, கல்லீரல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரு கைகள் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரு கண் விழிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள இரு பயனாளிகளுக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடலுறுப்பு தானமளித்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News