குழந்தைகள் கடத்தல் வீடியோ - எச்சரித்த மாவட்ட எஸ்.பி.

குழந்தை கடத்தல் குரல் பதிவுகளாக பரவி வருகிறது என்றதுடன், அது 100% வதந்தி என்ற காவல்துறை

Update: 2024-03-14 17:48 GMT

குழந்தை கடத்தல் எச்சரிக்கை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தையை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்துள்ளதாகவும், அது முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறினார்.

குழந்தை கடத்தல் குரல் பதிவுகளாக பரவி வருகிறது என்றதுடன், அது 100% வதந்தி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், ”வட மாநிலத்தில் இருந்து கோவையில் நிறைய பேர் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் எனும் சூழலில் இது வட மாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தவே வதந்தி பரப்பப்படுகிறது. 

குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த விதமான தகவலும் காவல்துறைக்கு வரவில்லை. வதந்தியை யார் பதிவிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யார் பரப்பினார்களோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை. கோவை கண்ணம்பாளையம் பகுதியில் நடைபெற்றதாக வீடியோ பரவுகிறது. அது வேறு ஏதோ ஒரு பகுதியில் வேறு ஏதோ ஒரு சம்பவத்திற்காக நடந்த வீடியோவை இதுபோன்று பரப்பி வருகின்றனர்.

குழந்தை கடத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறை கடுப்பாட்டு அறைக்கு அல்லது whatsapp எண்ணிற்கு அழைத்தால் அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்படும்” என்றும் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டத்தை பொருத்தவரை தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும்,  கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை போதைப் பொருட்கள் புழக்கம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News