மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி !
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Update: 2024-04-04 04:40 GMT
சேலம் அருகே உள்ள டி.எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் யுவன்சங்கர் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று அம்மாபேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் எலக்ட்ரீசியனுக்கு உதவியாளராக வேலை பார்த்தார். அப்போது டிரில்லர் எந்திரம் மூலம் துளையிடும் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக யுவன்சங்கர் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுவன்சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவனின் உடலை மீட்டு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.