அதிமுக ஊராட்சி தலைவர் மீது கோட்டாட்சியரிடம் புகார்
பையூர் அதிமுக ஊராட்சித் தலைவர் சரவணன் மீது பொதுமக்கள் சார்பில் கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கோட்டாட்சியர் தனலட் சுமி தலைமை தாங்கினார். இதில் பையூர் பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆரணி வட்டம், பையூர் கிராமத்தில் கிராம விவசாயிகளுக்காக நீர்ப்பாசனமாக சித்தேரி இருந்து வருகிறது.
மேலும் இந்த ஏரி மூலம் 100 ஏக்கர் நிலங்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று கோர்ட் உத்தரவு இருக்கும் நிலையில் ஏரி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து 3 சிறு பாலங் களையும், சாலைகளையும் ஊராட்சித்தலைவர் சரவணன் கட்டியுள்ளார். இதனால் அவருடைய செங்கல் சூளைக்கு சுலபமாக செல்வதற்கு வழி ஏற்படுவதால் அரசுக்கு 5 லட்சம் வீணடிப்பு செய்துள்ளார்.
இதுகுறித்து தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதில் பட்டா, பரப்பு திருத்தம், பட்டா பெயர் மாற்றம், பட்டா ரத்து, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம், ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி, மண்ணெண்ணெய் வழங்கக்கோரி, மணல் கடத்தல் தடுக்கக்கோரி, முதியோர் உதவித்தொகை, போலி பத்திரபதிவு ரத்து, சிமெண்ட் சாலை அமைக்கக்கோரி உள்ளிட்ட 57 மனுக்களை கோட்டாட்சியர் பெற்றுக் கொண்டு மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.