அரசு பணிமனையில் பஸ் மோதி கண்டக்டர் பரிதாப பலி
செங்கோட்டையில் அரசு பணிமனையில் பஸ் மோதி கண்டக்டர் பரிதாப பலி.;
Update: 2024-04-09 15:38 GMT
பலி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை குருசாமி தெருவை சேர்ந்த கோமதிநாயகம் (வயது 50), சொக்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகச்சாமி (வயது 29) ஆகிய இருவரும் சென்னை மற்றும் ஊட்டியில் இருந்து வந்த பேருந்தில் கண்டக்டராக இருந்தனர். வழக்கம் போல் நேற்று செங்கோட்டை டிப்போவில் பஸ்சை நிறுத்தி விட்டு டிக்கெட் பணத்தை ஒப்படைப்பதற்காக கேசியர் அறை முன்பு சேரில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு பேருந்தை டிரைவர் கரிவலம்வந்த நல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) டிப்போவில் கேசியர் அறை அருகே நிறுத்தினார். அந்த பேருந்து வாசலில் இடையூறாக இருப்பதாகக் கூறி வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதையடுத்து லட்சுமணன் பஸ்சில் ஏறி அந்த பஸ்ஸை இயக்கி பிரேக்கை மிதித்துள்ளார். பஸ்சில் பிரேக் இல்லாததால் பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கண்டக்டர்கள் இருவர் மீதும் எதிர்பாராதவித மாக மோதியது. இதில் இருவரும் அமர்ந்திருந்த சேர் முன்பு கிடந்த மேஜைக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் பணிமனையில் இருந்தவர்கள் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆறுமுச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.