தடையை மீறி செல்லும் பேருந்துகளால் விபத்து அபாயம்

பள்ளிபாளையம் திருச்செங்கோடு பிரதான சாலையில் மேம்பால பணிகள் நிறைவு பெறாத நிலையில், இரவில் தடையை மீறி பேருந்துகள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

Update: 2024-04-24 13:00 GMT

பள்ளிபாளையம் திருச்செங்கோடு பிரதான சாலையில் மேம்பால பணிகள் நிறைவு பெறாத நிலையில், இரவில் தடையை மீறி பேருந்துகள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சென்னை கன்னியாகுமரி தொழிற்த்தட திட்டத்தில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஈரோடு பள்ளி பாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்று பாலம் அருகில் இருந்து ஆலாம்பாளையம் சாலை வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது . இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வருகிறது.

பள்ளிபாளையம் திருச்சங்கோட்டை இணைக்கும் மிக முக்கிய சாலையில் டிவிஎஸ் மேடு, அலமேடு, ஆலாம்பாளையம், கோவிந்தம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகள் வருகிறது. திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையம் வழியே ஈரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும், தனியார் காகித ஆலை சாலை வழியாக பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்று வருகிறது.

இந்நிலையில் பள்ளிபாளையம் திருச்செங்கோடு பிரதான சாலையில் பணிகள் முழுமையாக மேம்பால பணிகள் நிறைவு பெறாத நிலையில் இரவு நேரத்தில் அத்துமீறி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருவதால் விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஜீவா செட் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவர் கூறும் பொழுது பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் தூண்கள் அமைக்கப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேம்பாலத்தின் கீழே பிரதான தார் சாலையின் ஒரு பகுதி மட்டுமே முழுமையாக பணிகள் முடிவு பெற்று ஒரு வழி பாதையில் உள்ளூர் வாகன ஓட்டிகள் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி இரவு நேரங்களில் திருச்செங்கோட்டில் இருந்து தனியார் காகித ஆலை வழியாக பள்ளிபாளையம் செல்ல வேண்டிய அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தடையை மீறி, நேரத்தை மிச்சபடுத்துவதற்காக திருச்செங்கோடு பிரதான சாலையில் வருகிறது

. இதன் காரணமாக இரவு நேரத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. அங்கிருந்து வரும் வாகனங்களும் அதிக அளவு வேகத்துடன் வருவதால் ஒரு வழி சாலையாக இருப்பதால், எதிர்வரும் வாகனங்கள் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே பாலம் வேலைகள் முழுமையாக முடியும் வரை தடையை மீறி வரும் வாகன ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் . இதுகுறித்து நெடுஞ்சாலை துறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் பொழுது பகல் நேரம் முழுவதும் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த அதிக அளவு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் இந்த சாலையில் வந்து செல்வதால் மேம்பாலம் பணிகளை கூடுமானவரை தவிர்த்து இரவு நேரத்தில் மட்டுமே பணிகளை செய்து வருகிறோம்.

இந்நிலையில் இரவு நேரத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இரவு 11 மணிக்கு மேல் அத்துமீறி திருச்செங்கோடு பிரதான சாலை வழியாக பள்ளிபாளையம் வருவது தொடர் கதையாகி வருகிறது . பலமுறை இதுகுறித்து நாங்கள் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரித்தும் அவர்கள் கண்டு கொள்வதாக இல்லை . இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் தான் நாங்கள் இரவு நேரத்தில் மேம்பால பணிகளை செய்கிறோம். ஆனால் இப்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடை செய்யப்பட்ட பகுதியில் பேருந்துகள் வருவதால் எங்கள் பணி பாதிக்கப்படுகிறது.

ஒருவழிப்பாதையாக உள்ள சாலையில் எங்கள் வாகனங்களை நிறுத்தி நாங்கள் மேம்பால பணிகளை செய்வதாலும், எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு இரவு நேரத்திலும் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளோம். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News