இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ சார்பில் உதவித்தொகை

திருப்பூரில் பணியின்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவித்தொகை இ.எஸ்.ஐ சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2024-02-02 12:03 GMT

 இ.எஸ்.ஐ சார்பில் உதவித்தொகை

திருப்பூரில் பனியின் போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவித்தொகை இ.எஸ்.ஐ. சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வெங்கடேசன் (32) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியில் இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இந்நிலையில் நிறுவனம் வெங்கடேசனை இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு செய்தது. பணியின் போது ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால் இ.எஸ்.ஐ. கழகம் அந்த உயிரிழப்பை பணியினால் ஏற்பட்ட விபத்தாக அங்கீகரித்தது. மேலும், அவருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ. சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேசன் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில் வெங்கடேசின் தாய் சின்னப்பாப்பா மற்றும் தந்தை கோவிந்தன் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.6500 வாழ்நாள் முழுவதும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தனியார் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கோவை இ.எஸ்.ஐ. சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் இசக்கி சிவா, தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் முன்னிலையில் வெங்கடேசின் குடும்பத்தினரிடம் இதற்கான ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. கிளை மேலாளர் (திருப்பூர்) பூபதி, நிறுவன மனிதவள மேலாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. திட்டத்தின் பல்வேறு பலன்கள் மற்றும் இ.எஸ்.ஐ. எண்ணுடன் ஆதாரை இணைப்பதன் நன்மைகள் குறித்து துணை இயக்குனர் இசக்கி சிவா தெரிவித்தார்.
Tags:    

Similar News