அந்தியோதயா ரயிலில் பயணசீட்டு சோதனை செய்த போலி டி.டி.ஆர் கைது

அந்தியோதயா விரைவு ரயிலில் பயணிகளின் பயணச் சீட்டை சோதனை செய்த போலி டி.டி.ஆரை மதுரை கோட்ட தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Update: 2024-06-18 07:28 GMT

கைது செய்யப்பட்ட மணிகண்டன்

அந்தியோதயா அதிவிரைவு ரயில் தினசரி தாம்பரத்திலிருந்து நாகர்கோயில் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல் நேற்று இரவு 11:00 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இன்று காலை 6:10 மணியளவில் திருச்சியை அடைந்தது. அங்கு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் உடையில் ஏறிய நபர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து உள்ளார்.

அதே ரயிலில் மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவணசெல்வி என்பவரும் பயணம் செய்தார். அவர் இந்த டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபரிடம் எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்ட பொழுது மதுரையில் பணிபுரிவதாக கூறியிருக்கிறார். நானும் மதுரையில் தான் பணிபுரிகிறேன் உங்களை பார்த்ததில்லை என்று அவரது அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்ததில் அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பதை என்பது கண்டறிந்தார்.

இதனனையடுத்து மதுரை ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் போலி டிடி.ஆரை ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது அந்த போலி டி.டி.ஆர் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் எதற்காக இப்படி செய்தார் என்பதை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News