பச்சைப்பயறு விலை அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் விலை அதிகம்கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-05-18 04:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் விலை அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகளின் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ராபி பருவத்தில் பச்சைப்பயறு கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் மூலம் பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.85.58-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.72 முதல் ரூ.75 வரை மட்டுமே கொள்முதல் செய்யும் நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.10-க்கு மேல் விலை கூடுதல் விலை கிடைப்பதால் இங்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் விவசாயிகள் தங்களின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை ஆகியவற்றை முன்பதிவு செய்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை, இந்த விற்பனைக்கூத்தில் 345 விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில், சுமார் 100 விவசாயிகளிடம் மட்டுமே பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியே தொடங்க வேண்டிய கொள்முதல் விற்பனைகூட கட்டுமான பணி காரணமாக 45 நாட்கள் தாமதமாக தற்போது கொள்முதல் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்த அளவில் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (கடந்த ஆண்டு 900 மெட்ரிக் டன்னாக இருந்த கொள்முதல் நிகழாண்டுக்கு 400 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது). மேலும், ஒரு ஏக்கருக்கு நாங்கள் 6 மூட்டை பச்சைப்பயிறு அறுவடையாகிறது. ஆனால், இங்கு சிட்டா அடங்கல் பெற்றுக்கொண்டு ஒரு ஏக்கருக்கு 110 கிலோ மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இதனால் எங்கள் பச்சைப்பயிறை வெளிச்சந்தையில் விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கொள்முதல் இலக்கை மத்திய, மாநில அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒரு ஏக்கருக்கான கொள்முதல் அளவையும் அதிகரித்து அறிவிக்க வேண்டும். இருந்தபோதிலும், வெளி விற்பனையை விட கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கூடுதலாக கிடைக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கும், தேசிய வேளாண் கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்புக்கும் (நாப்டு) நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News