புகார் அளிக்க வந்த தம்பதியினரின் நகையை அடகு வைத்த பெண் ஆய்வாளர்

திருமங்கலத்தில் புகார் அளிக்க வந்த தம்பதியினரின் 95 பவுன் நகையை அடகு வைத்த பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-05-25 14:42 GMT

திருமங்கலத்தில் புகார் அளிக்க வந்த தம்பதியினரின் 95 பவுன் நகையை அடகு வைத்த பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


குடும்ப பிரச்சனையால் காவல் நிலையம் வந்த புகார் தாரரின் நகையை வாங்கி அடகு வைத்த மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. உத்தரவு. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் நகைகளை  அடகு வைத்த காவல் ஆய்வாளர் -  ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்ட சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்திருந்த நிலையில் கணவன் வீட்டில் இருந்து பெற்ற 95 பவுன் நகைகளை மனைவியிடம் கொடுக்காமல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அடகு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை காவல் சரக ஐஜி பெண்காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் கீதா. இவரது கணவர் சரவணன் இவர் மதுரை திருநகர்  காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் 33 பெங்களூரில் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிநயா 30 சென்னையில் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்குமான மோதல் அதிகரிக்கவே திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. விசாரணையின் போது கணவருடன் இனி சேர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவே திருமணத்தின்போது தனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா தரப்பு ஆய்வாளரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜேஷிடம் அபிநயாவின் நகைகளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆய்வாளர் கீதா கூறியதை தொடர்ந்து 95 பவுன் நகைகளை ராஜேஷ் ஆய்வாளர் கீதாவிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒப்படைத்துள்ளார். ஆனால் அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் அபிநயாவின் குடும்பத்தினர் நகைகளை தராமல் ஏமாற்றுவதாக ராஜேஷ் குடும்பத்தினருடன் தகராறு செய்ததாக தெரிய வருகிறது அதற்கு ராஜேஷ் தன்னிடம் நகை இல்லை எனவும் ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்தில் ஆய்வாளர் கீதாவிடம் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பெண் வீட்டார் தகராறு செய்ததால் ஆத்திரமுற்ற ராஜேஷ் ஆய்வாளர் கீதாவிடம் நகைகளை பெண் வீட்டாரிடம் கொடுக்கும்படி கூறியதாகவும் அதற்கு ஆய்வாளர் கீதா நகைகளை கொடுக்க முடியாது யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.தொடர்ந்து புகார் தொடர்பாக டிஎஸ்பி அலுவலகம் ஆய்வாளரிடம் நடத்திய விசாரணையில் அனைத்து நகைகளையும் காவல் ஆய்வாளர் கீதா தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து நடத்திய பேச்சு வார்த்தையில் நகையை திருப்பி தருவதற்கு ஆய்வாளர் கீதா கால அவகாசம் கேட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் 20 பவுன் நகைகளை மட்டும் கீதா திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி 75பவுன் நகைகளை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சம்பவம் தொடர்பாக நேரடியாக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யபாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நகைகளை மீட்டுத்தர காவல் நிலையத்தை நாடிய பெண்ணின் நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டிய  பெண் காவல் ஆய்வாளரே தன்னிடம் ஒப்படைத்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம்  திருமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News