பைனான்சியர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

திருக்கோஷ்டியூரில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2024-06-20 04:14 GMT

சடலம் மீட்பு 

திருக்கோஷ்டியூர் அருகே திருவைரவன்பட்டி தெப்பக்குளத்தில் ஒரு உடல் நீரில் மிதப்பதாக திருக்கோஷ்டியூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து போலீசாருடன் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் செல்வராகவன் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவரது தகவலின் அடிப்படையில் தெப்பக்குளத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் குளத்திற்குள் இறங்கி போராடி மூழ்கிக் கிடந்த உடலை மீட்டனர்.

பின்பு இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இறந்தவர் திருப்பத்தூர் தம்பிபட்டி மேட்டுதெருவை சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் செந்தில்குமார் (42) என்றும், இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காவல் ஆய்வாளர் செல்வராகவனின் தொடர் விசாரணையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் தற்காலிகமாக புதுத்தெருவில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து செந்தில்குமாரின் உடலை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News