ஊட்டி அப்பர் பஜாரில் தீ விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Update: 2024-04-21 02:55 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த அப்பர் பஜார் பகுதியை சேர்ந்தவர் சசிகலா, 68. ஜெராக்ஸ் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய உறவினர் கஸ்தூரி, 58 தாவரவியல் பூங்காவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில சசிகலா, கஸ்தூரி மற்றும் 4 வயது ஆண் குழந்தை சசிகலாவின் வீட்டில் இருந்தனர். இவர்களுடைய வீடு தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் உள்ளது.

மின் கசிவு காரணமாக வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயின் வேகம் அதிகரித்து வேகமாக பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் தீ பரவுவதை குறித்து ஊட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்ட உதவி அதிகாரி பரந்தாமன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நகரின் மையப்பகுதி என்பதாலும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்தது தீயை கட்டுப்படுத்தியதாலும் மற்ற வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் தடுக்கப்பட்டது. இதுகுறித்து ஊட்டி மத்திய காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News