மர்மமான முறையில் மேஸ்திரி இறந்த வழக்கில் 5 பேர் கைது!

அரக்கோணம் அருகே மர்மமான முறையில் மேஸ்திரி இறந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-06-06 16:11 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சேட்டு (40).இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அதேப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து அவரது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார், சேட்டு இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இறந்த சேட்டுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததும், சம்பவத்தன்று முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதில் 5 பேர் சேர்ந்து சேட்டுவை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 5 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் அதேப்பகுதியை சேர்ந்த வீரமணி (22), ஈசாக் (20), ராஜேஷ் (35), ராமதாஸ் (41), ராமச்சந்திரன் (44) ஆகிய 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News