தடகளப் போட்டியில் தங்கம்: திருச்சி வீரா்களுக்கு வரவேற்பு !

காஷ்மீரில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்று திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனா்.

Update: 2024-06-19 09:22 GMT

வீரா்களுக்கு வரவேற்பு

இந்திய இளைஞா் விளையாட்டு சங்கம் சாா்பில், காஷ்மீரில், 4-ஆவது ஒய்எஸ்பிஏ தேசிய சாம்பியன்ஷிப் - 2024 தடகளப்போட்டி ஜூன் 11 முதல் 13 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமாா் 1,200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் தமிழ்நாடு அணி சாா்பில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 3 வீரா்கள் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சோ்ந்த அவினேஷ்குமாா் (20) என்ற வீரா் 5,000 மீட்டா் ஓட்டப்பந்தையத்தில் முதலிடமும், திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (20) என்ற வீரா் 800 மீட்டா் ஓட்டப்பந்தையத்தில் முதலிடமும், சமயபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (18) 3,000 மீட்டா் ஓட்டப்பந்தையத்தில் முதலிடமும் பெற்று தங்கப்பதக்கம் பெற்றனா். போட்டிகளில் பங்கேற்றுவெற்றிபெற்ற அவா்கள் செவ்வாய்க்கிழமை திருச்சி திரும்பினா். ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவா்களுக்கு அவா்களது பெற்றோா் மற்றும் உறவினா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News