சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் நடந்த தங்க கருட சேவை விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-21 01:23 GMT

தங்க கருட சேவை 

மாசி மகப்பெருவிழாவையொட்டி சவுரிராஜப் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மாசி மகப்பெருவிழா நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த விழா வருகின்ற 29-ஆம் தேதிவரை நடக்கிறது. விழாவையொட்டி 4-வது நாள் நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.இதில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 22 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 24-ஆம் தேதி காலை சவுரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. 29-ம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர்,கிராம மக்களும் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News