யானை தந்தம் கடத்தல்; 2 பேர் கைது

நாகர்கோவில் வழியாக காரில் அத்துமீறி கடத்த முயன்ற யானை தந்தத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-10 12:16 GMT

நாகர்கோவில் வழியாக காரில் அத்துமீறி கடத்த முயன்ற யானை தந்தத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதி வழியாக காரில் யானை தந்தம் கடத்தப்ப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்றிரவு செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.    

 அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 2.3 கிலோ எடை கொண்ட யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த புதியவன் (வயது 32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.       

விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யானை தந்தம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் அவர் விற்பனைக்கு கொடுத்ததாகவும், இதை தூத்துக்குடியை சேர்ந்த இன்னொரு நபர் வாங்க வந்ததாகவும் தாங்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்கள்.    

 இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். தலை மறைவானவரில் ஒருவர் அதிமுக நிர்வாகி என கூறப்படுகிறது. அவர்களை பிடித்தால் தான் யானை தந்தம் எங்கிருந்து கிடைத்தது? எப்படி வந்தது? என்ற விவரம் தெரிய வரும்.

Tags:    

Similar News