கன்னியாகுமரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர்
கன்னியாகுமரி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிபர் முதன் முதலாக அறிவிப்பு.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஏற்கனவே தொடங்கி விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகளே முடியாத நிலையில், நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. இதில் முதற்கட்ட பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் மரிய ஜெனிபர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி பலமான கூட்டணி என்பது கடந்தகால வரலாறு. எனவே, இந்த முறை இந்தியா கூட்டணி சார்பில் மீண்டும் விஜய் வசந்த் எம்.பி.யே வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என தெரிகிறது. கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால், அந்த தொகுதி தேர்தல் களம் அணல் பறக்கிறது.
இந்த சூழலில் கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரிய ஜெனிபர் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 42 வயதாகும் மரிய ஜெனிபர் மாதவபுரத்தை சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவர், பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரி. கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி பொறியியலும், சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ., மார்கெட்டிங்கும் படித்துள்ளார். இவரது திருமணம் காதல் திருமணம் ஆகும். கணவர் பெயர் தீபக் சாலமன். கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
கன்னியாகுமரி, சுவாமிநாதபுரத்தை சேர்ந்த தீபக் சாலமன் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். மரிய ஜெனிபர் - தீபக் சாலமன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தைகள் மூவரும் துபாயில் படித்து வருகின்றனர். சுமார் 17 ஆண்டுகால பணி அனுபவம், குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வெளிநாடுகளில் மட்டும் 14 ஆண்டுகலாம் பணியாற்றியுள்ள மரிய ஜெனிபர், மாதந்தோறும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற்று வந்தவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் இருந்துள்ள மரிய ஜெனிபர் கன்னியாகுமரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்துக்கு வந்துள்ளார். காங்கிரஸ், பாரதிய ஜனதா, அதிமுக , நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி குமரி பாராளுமன்ற தேர்தலில் நடக்கலாம்.