விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
சிவகங்கையில் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Update: 2024-03-25 06:28 GMT
கும்பாபிஷேக விழா
சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மிகப் பழமையான இத்திருக்கவிலை புனரமைத்து மகா மண்டபம், மூலவர் விமானம் புதிதாக அமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவில் முன்பு யாகசாலை அமைத்து விக்னேஸ்வர பூஜையுடன் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாக பூஜையில் மூலவர் கற்பக விநாயகர் மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள், பூமாலைகள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டன பின்னர் கலசத்திற்கு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியாரகள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசத்திற்கு தீப ஆராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன. மூலவர் கற்பக விநாயகர் சுவாமிக்கும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்றுவட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கற்பக விநாயக பெருமானை வழிபட்டனர்.