இணையவழி வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ.21 லட்சம் மோசடி
இணையவழி வாயிலாக நடைபெற்ற மோசடி குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-02-01 16:10 GMT
தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரிடம் இணையவழி வேலை எனக் கூறி ரூ. 20.99 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞருக்கு வாட்ஸ் ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் இணையவழி வேலை எனக்கூறி தகவல் வந்தது. இதை நம்பிய இளைஞர் அதில் குறிப் பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய மர்ம நபர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி, பல்வேறு டாஸ்க்குகளை நிறைவேற்றினால் பல மடங்கு லாபம் தருவதாகக் கூறினார். இதன்படி, மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு இளைஞர் பல்வேறு தவணைகளில் ரூ.20.99 லட்சம் செலுத்தினார். மர்ம நபர் கூறியபடி டாஸ்க்குகளை நிறைவேற்றிய இளைஞருக்கு எந்தத் தொகையும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மர்ம நபரைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன்பேரில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.