Update: 2024-08-25 14:39 GMT
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலய 7 ம் ஆண்டு வருடாபிஷேக விழா; இஸ்லாமிய தம்பதியர் தேரை இழுக்க 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்று சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 7 ம் ஆண்டு வருடாபிஷேக விழா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் துவக்கமாக 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து சாய்ராம், சாய்ராம் என பக்தி முழக்கங்கள் எழுப்பியவாறு கோவில் வளாகம் முழுமையும் சுற்றி வந்து ஸ்ரீ குரு சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் தேர் சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தேரில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இஸ்லாமிய தம்பதியர், இந்து பக்தர்களுடன் இணைந்து தேரை இழுத்து துவக்கி வைத்து மத நல்லிணக்கத்துடன் தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவ தாண்டவம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் சாய்பாபாவிற்கு பக்தி கீர்த்தனைகள் பாடி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த வருடாபிஷேக விழாவில் அருப்புக்கோட்டை, பந்தல்குடி, வாழ்வாங்கி, சேதுராஜபுரம், சிதம்பராபுரம், கொப்புசித்தம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News