சாலையை உடைத்த அதிகாரிகள்

மழவராயனேந்தல் சாலை உடைப்பு - பொதுமக்கள் அவதி

Update: 2024-01-02 17:21 GMT

மழவராயனேந்தல் சாலை உடைப்பு - பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி வழியாக மழவராயனேந்தலுக்கு தார்ச்சாலை உள்ளது. இச்சாலை வழியாக டவுன் பஸ் மற்றும் வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. திருப்பாச்சேத்தி கண்மாயில் இருந்து மடைகள் வழியாக வெளியேறிய தண்ணீர் வடியாததால் திருப்பாச்சேத்தி காலனி பகுதி வீடுகளினுள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வருவாய்துறையினர் மழவராயனேந்தல் செல்லும் தார்ச்சாலையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். தண்ணீர் முழுமையாக வெளியேறிய பின்னரும் இதுவரை சாலை சரி செய்யப்படவில்லை. இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக சென்று விடுகின்றன. கிராம மக்கள் சாலையை நடந்து வந்து கடக்க வேண்டியுள்ளது. திருப்பாச்சேத்தியில் விவசாய பொருட்கள் உள்ளிட்டவைகள் வாங்கி செல்ல முடியாமல் இரண்டு கி.மீ தூரம் சுற்றி செல்லவேண்டியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போல ரோட்டை துண்டித்து தண்ணீரை வெளியேற்றினர். சரி செய்யும் போது இந்த இடத்தில் சிமெண்ட் குழாய் அமைத்து அதன் மேல் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தற்போது மீண்டும் ரோட்டை துண்டித்ததுடன் இதுவரை சரி செய்யவில்லை. மழவராயனேந்தலில் இருந்து திருப்பாச்சேத்தி பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பலரும் பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து வந்து செல்கின்றனர். எனவே இப்பகுதியில் சிமெண்ட் குழாய் வைத்து சாலையை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
Tags:    

Similar News