சேலம் பகுதியில் அதிகாரிகள் சோதனை வீடுகளில் பதுக்கிய 78 மதுபாட்டில்கள் பறிமுதல்......
சேலம் மாவட்டத்தில் சந்து கடைகளில் மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2024-04-06 09:08 GMT
சேலம் மாவட்டத்தில் சந்து கடைகளில் மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி பகுதியில் கோபி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் 49 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோபி மீது சூரமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதேபோல், டாஸ்மாக் தாசில்தார் மாதேஸ்வரன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வீராணம் பெருமானூர் காட்டுவளவை சேர்ந்த வடிவேல் (47) என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தாம்பட்டி, வீராணம் பகுதிகளில் நடந்த சோதனையில் மொத்தம் 49 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.